செங்கல்பட்டு மாவட்டத்தில் 'உழவன் செயலி' பதிவிறக்கம் செய்து விவசாயிகள் பயன்பெறலாம் - வேளாண்மை அதிகாரி வேண்டுகோள்


செங்கல்பட்டு மாவட்டத்தில் உழவன் செயலி பதிவிறக்கம் செய்து விவசாயிகள் பயன்பெறலாம் - வேளாண்மை அதிகாரி வேண்டுகோள்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உழவன் செயலி’ பதிவிறக்கம் செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு வேளாண்மை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் 'உழவன் செயலி' என்ற செயலி உருவாக்கப்பட்டு விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தேவையான 22 வகையான சேவைகள் இச்செயலி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய அரசின் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை, சான்றளிப்புத்துறை, நீர்வடி பகுதி திட்டம் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு துறைகளின் மூலம் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த துறைகளின் மூலம் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய இடுப்பொருட்களின் தேவையினை மானிய விலையில் பெற்று பயன் பெறவும், இச்செயலி வாயிலாகவே தேவையான விவரங்களையும், ஆவணங்களையும் உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம்.

இது தவிர இச்செயலின் மூலம் பயிர் காப்பீடு, உரம் மானியம், விதைகளின் இருப்பு, உதவி வேளாண்மை அலுவலர் வருகை விபரம், பூச்சி நோய் தாக்குதல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு முறைகளின் பரிந்துரைகள், வேளாண் எந்திரங்களின் இருப்பு மற்றும் வாடகை போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக அரசின் முன்னோடி திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்ற குழுவாகப் பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் அனைவரும் இச்செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறும் மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களையும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என அதில் கூறப்பட்டிருந்தன.


Next Story