நெல், பருத்தி, உளுந்து பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு பெறலாம்


நெல், பருத்தி, உளுந்து பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு பெறலாம்
x

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் நெல், பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர்

பயிர் காப்பீட்டு திட்டம்

வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் போது விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச்செய்து, விவசாயத்தில் நிலைபெற செய்யவும், பயிர் காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு 2023-24-ம் ஆண்டில் ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் சிறப்பு பருவத்தில், நெற்பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையார்பாளையம், தா.பழூர், சுத்தமல்லி, அரியலூர், ஏலாக்குறிச்சி, கீழப்பழுவூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம், பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், திருமானூர் ஆகிய 15 இடங்களிலும், பருத்தி பயிருக்கு அரியலூர், ஏலாக்குறிச்சி, கீழப்பழுவூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம் மற்றும் சுத்தமல்லி ஆகிய 7 இடங்களிலும், மக்காச்சோள பயிருக்கு அரியலூர், நாகமங்கலம், ஏலாக்குறிச்சி, கீழப்பழுவூர், திருமானூர், ஆர்.எஸ்.மாத்தூர் மற்றும் செந்துறை ஆகிய 7 இடங்களிலும் பயிர் காப்பீடு செய்ய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிரீமிய தொகை

இதேபோல், ராபி பருவத்தில் உளுந்து பயிருக்கு, ஆண்டிமடம், குவாகம், உடையார்பாளையம், பொன்பரப்பி, ஆர்.எஸ்.மாத்தூர், செந்துறை, சுத்தமல்லி, தா.பழூர் மற்றும் திருமானூர் ஆகிய 9 இடங்களிலும், நிலக்கடலைக்கு ஆண்டிமடம், குவாகம், அரியலூர், நாகமங்கலம், ஜெயங்கொண்டம், குண்டவெளி, உடையார்பாளையம், பொன்பரப்பி, ஆர்.எஸ்.மாத்தூர், செந்துறை, சுத்தமல்லி மற்றும் தா.பழூர் ஆகிய 12 இடங்களிலும் பயிர் காப்பீடு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, நடப்பு பருவத்தில் நெல், மக்காச்சோள பயிர்களுக்கு நவம்பர் மாதம் 15-ந்தேதி வரையிலும், பருத்திக்கு வருகிற 31-ந் தேதி வரையிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் 1 ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.567-ம், மக்காச்சோளத்திற்கு ரூ.341.25-ம், பருத்திக்கு ரூ.578.03-ம் பிரீமிய தொகையாக செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

ரசீது...

உளுந்து பயிருக்கு நவம்பர் மாதம் 30-ந்தேதி வரையிலும், நிலக்கடலைக்கு 2024-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். 1 ஏக்கர் உளுந்து பயிருக்கு ரூ.210-ம், 1 ஏக்கர் நிலக்கடலை பயிருக்கு ரூ.349.5-ம் பிரீமிய தொகையாக செலுத்தி காப்பீடு பெறலாம். விவசாயிகள் பொது சேவை மையத்தில் பதிவு செய்யும்போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை இணைத்து பிரீமிய தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதை பெறலாம்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் காப்பீடு செய்யலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகி பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story