சர்வேயரை கண்டுபிடித்து தரக்கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


சர்வேயரை கண்டுபிடித்து தரக்கோரி    விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
x
தினத்தந்தி 6 Oct 2022 6:45 PM GMT (Updated: 6 Oct 2022 6:46 PM GMT)

சர்வேயரை கண்டுபிடித்து தரக்கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி கிராமத்தின் சர்வேயர் சரியாக பணிக்கு வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் நிலத்தை அளவீடு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட அப்பகுதி விவசாயிகள் சர்வேயரை கண்டு பிடித்து தரக்கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு புதுக்கூரைப்பேட்டை கே.என்.கலியபெருமாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சர்வேயரை கண்டுபிடித்து தரக்கோரி கோஷம் எழுப்பினர். அதன்பிறகு விவசாயிகள் விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பெரியவடவாடி எல்லையில் அமைந்துள்ள 10 சென்ட் இடத்தை ஆய்வு செய்து பட்டா மாற்றம் செய்து தர ஒரு மாதத்திற்கு முன்பு சர்வேயரிடம் மனு கொடுக்க சென்றோம். ஆனால் இதுவரை சர்வேயரை பார்க்க முடியவில்லை. ஆகவே அவரை கண்டுபிடித்து இடத்தை அளவீடு செய்து பட்டா மாற்றம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மேற்கண்ட மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பழனி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதைத்தொடா்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story