சீரமைப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பவானி வாய்க்கால்
கீழ்பவானி வாய்க்கால் மூலமாக ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்காலில் ரூ.709 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. அங்கு கான்கிரீட் தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் கடைமடை வரை தண்ணீர் செல்ல வேண்டும் என்றால் சீரமைப்பு பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று மற்றொரு தரப்பு விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் விவசாயிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
காலிக்குடங்கள்
இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி ஈரோடு அருகே வாய்க்கால்மேடு பகுதியில் நேற்று போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் பல்வேறு விவசாய அமைப்பு நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணி மேற்கொள்ளும்போது கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளதால் கசிவுநீர் திட்டங்கள் பாதிக்கப்படும். கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று விளக்கி பேசினார்கள். இதேபோல் பெண்கள் பலர் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் பங்கேற்றார்கள்.