கையில் கரும்பை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கையில் கரும்பை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

கையில் கரும்பை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் கையில் கரும்பை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் கரும்பை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க. காசிநாதன் தலைமை தாங்கினார். முருகேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், துணை தலைவர்கள் கணேசன், கலைமணி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

நிலுவைத்தொகை

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு 1966-ம் ஆண்டு கரும்பு சட்டத்தின் படி 8.5 சதவீதம் பிழி திறனுக்கு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை அறிவிக்க வேண்டும். திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத்தொகைகளை அதற்கான வட்டியுடன் தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும்.

திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் மோசடி செய்து வாங்கிய கடன் தொகை ரூ.300 கோடி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் கரும்பு விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story