கடையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் மண்டல விரிவாக்கத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு- கூட்டம் ஒத்திவைப்பு


கடையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில்   சுற்றுச்சூழல் மண்டல விரிவாக்கத்துக்கு  விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு-  கூட்டம் ஒத்திவைப்பு
x

கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் மண்டல விரிவாக்கத்திற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது

தென்காசி

கடையம்:

கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் மண்டல விரிவாக்கத்திற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

விரிவுபடுத்த முடிவு

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கடையம் சரகம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியை விரிவுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி பாதுகாக்கப்பட்ட வன எல்லையிலிருந்து 1.5 கி.மீ. தூரத்திற்கு புதிய கட்டமைப்புகள், தொழிற்சாலைகள், குவாரி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுதொடர்பாக மேலாம்பூர், சிவசைலம், தர்மபுரம்மடம், கோவிந்தப்பேரி, மேலக்கடையம், கடையம் பெரும்பத்து பகுதி-2 ஆகிய 6 கிராம விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று கோவிந்தப்பேரி கிராமத்தில் நடைபெற்றது.

கருத்துக்கேட்பு கூட்டம்

கோவிந்தப்பேரி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் தலைமை தாங்கினார். கடையம் உதவி வனப்பாதுகாவலர் (பயிற்சி) ராதை, கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்குமார், கடையம் பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பெத்தான்பிள்ளைக்குடியிருப்பு, சிவசைலம், தர்மபுரம் மடம், கோவிந்தப்பேரி, மேலாம்பூர், கடையம் பெரும்பத்து கிராமங்களிலிருந்து கலந்து கொண்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் குறித்து முறையாக தொடர்புடைய ஊராட்சிகள், விவசாய சங்கங்களில் தகவல் தெரிவிக்கவில்லை என்றும், சுற்றுச்சூழல் மண்டல விரிவாக்கத்தால் விவசாயிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.

அலுவலர்கள்

கூட்டத்தில் தாசில்தார் அருணாசலம், வருவாய் ஆய்வாளர்கள் அங்கப்பன், முருகேஷ், ஊராட்சி மன்ற தலைவர் கீழக்கடையம் பூமிநாத், கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்சீலா பரமசிவன்,

கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பாசனக் கமிட்டி நிர்வாகிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story