பிரதம மந்திரியின் கவுரவ நிதிஉதவி திட்டத்தில் ஆதார் விவரங்களை விவசாயிகள் சரிப்பார்க்க வேண்டும் கலெக்டர் மோகன் தகவல்

பிரதம மந்திரியின் கவுரவ நிதிஉதவி திட்டத்தில் ஆதார் எண் விவரங்களை சரிப்பார்த்தால் மட்டுமே விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை கிடைக்கும் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஊக்கத்தொகை
பிரதம மந்திரியின் கவுரவ நிதிஉதவி திட்டத்தின்கீழ், நிலம் உள்ள விவசாயிகள், வேளாண் இடுபொருட்களை வாங்கும் வகையில், 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்கள் ஆதார் விவரங்களை சரிசெய்தால் மட்டுமே, திட்டத்தின் 13-வது தவணைத்தொகையை பெற முடியும்.
விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ், பயன்பெறும் விவசாயிகளில் 33 ஆயிரம் பேர் தங்களது ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாமல் உள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகளில், ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை ஏற்கனவே இணைத்துள்ளவர்கள், www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில், தங்களின் ஆதார் எண் விவரத்தை உள்ளீடு செய்தால், ஓடிபி எண் தங்களது செல்போனுக்கு அனுப்பப்படும். அந்த ஓடிபி எண்ணை உள்ளீடு செய்து ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதிபடுத்திக்கொள்ளலாம்.
ஆதார் இணைத்தால் மட்டுமே
இதுநாள் வரை ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று விரல்ரேகையை பதிவு செய்து பி.எம். கிசான் திட்ட இணையதளத்தில் ஆதார் விவரங்களை பதிவு செய்யலாம். விவசாயிகள் தங்கள் பகுதி தபால் அலுவலகம் மூலமும், ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும் வேளாண்மை உதவி இயக்குனர்கள் அனைத்து கிராமங்களிலும் இதுகுறித்து சிறப்பு முகாம் நடத்தி வருவதால் அனைத்து விவசாயிகளும் நாளை மறுநாள் (15-ந் தேதிக்குள்) பதிவு செய்யலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.