நெல் பயிர் செய்த விவசாயிகள் ரூ.464 செலுத்தி காப்பீடு செய்துகொள்ள வேண்டும்


நெல் பயிர் செய்த விவசாயிகள் ரூ.464 செலுத்தி காப்பீடு செய்துகொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:45 PM GMT)

நெல் பயிர் செய்த விவசாயிகள் ரூ.464 செலுத்தி காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம்

கண்காணிப்புக்குழு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

பயிா் காப்பீடு

விழுப்புரம் மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த எச்.டி.எப்.சி. எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் நடப்பு சம்பா பருவத்தில் 797 வருவாய் கிராமங்களில் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ராபி பருவத்தில் 294 வருவாய் கிராமங்களிலும் உளுந்து, மணிலா, கரும்பு ஆகிய பயிர்கள் 34 குறுவட்டங்களிலும், எள் பயிருக்கு 14 குறுவட்டங்களிலும், வாழை, மரவள்ளி முறையே 6 குறுவட்டங்களிலும் காப்பீடு செய்ய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

சம்பா நெல் பயிர்

இதற்கு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய சரியான விவரங்களை அளித்து விவசாயிகள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

காப்பீடு செய்ய ஒரு ஏக்கர் சம்பா நெல் பயிருக்கு விவசாயிகள் பிரீமியம் தொகையாக ரூ.464 செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய வருகிற நவம்பர் 15-ந் தேதி கடைசி நாளாகும். நெல்(நவரை) பருவத்தில் விவசாயிகள் காப்பீடு செய்ய செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ரூ.464 ஆகும். காப்பீடு செய்ய 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி கடைசி நாளாகும்.

உளுந்து, கரும்பு

உளுந்து பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.266 ஆகும். காப்பீடு செய்ய நவம்பர் 30-ந் தேதி கடைசி நாளாகும். மணிலாவிற்கு பிரீமியம் ஏக்கருக்கு ரூ.415. காப்பீடு செய்ய 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந் தேதி கடைசி நாளாகும். எள்ளுக்கு பயிர் காப்பீடு செய்ய பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.152 ஆகும். காப்பீடு செய்ய 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி கடைசி நாளாகும். மேலும் கரும்பு பயிருக்கு காப்பீடு செய்ய பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.2,569 ஆகும். காப்பீடு செய்ய 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி கடைசி நாளாகும். வாழை பயிருக்கு காப்பீடு செய்ய பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.1,934, காப்பீடு செய்ய 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி கடைசி நாளாகும். மரவள்ளிக்கு காப்பீடு செய்ய பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.1,455, காப்பீடு செய்ய 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி கடைசி நாளாகும்.

பொது சேவை மையங்கள்

விவசாயிகள், பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக காப்பீடு கட்டணம் செலுத்திக்கொள்ளலாம். கடன்பெறும் விவசாயிகளுக்கு அவர்களின் ஒப்புதலுடன் வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சண்முகம், துணை இயக்குனர் (திட்டங்கள்) பெரியசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், உதவி இயக்குனர்(பயிர் காப்பீடு) வேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story