அனுமதி இல்லாத கல்குவாரிகளைமூடக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்


அனுமதி இல்லாத கல்குவாரிகளைமூடக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
x

திருச்செங்கோடு அருகே அனுமதி இல்லாத கல்குவாரிகளை மூடக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

திருச்செங்கோடு

போராட்டம்

திருச்செங்கோடு அருகே கோக்கலை கிராமம், எளையம்பாளையம் கிராமத்தில் கிராம ஊராட்சியிலும், தொழிற்சாலை ஆய்வாளர் அலுவலகத்திலும் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கல் குவாரிகள், கிரசர் ஆலைகள் ஆகியவை இயங்கி வருகின்றன. இவைகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும், அனுமதியில்லாத கல்குவாரிகளுக்கு வெடி மருந்து கிடைத்தது எப்படி என காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோக்கலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 150 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு விவசாயி பழனிவேல் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் முகிலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மேற்கு புறநகர் மாவட்ட செயலாளர் பெரியசாமி, எலச்சிபாளையம் ஒன்றிய கொ.ம.தே.க. செயலாளர் சுப்பிரமணி, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், ஒன்றியக் குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நடவடிக்கை

இதுகுறித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறியதாவது:- கோக்கலை, எளையாம்பாளையம் பகுதிகளில் 2 கிரஷர்கள், 5 எம் சாண்ட் ஆலைகள் அரசு அனுமதியில்லாமல் இயங்கி வருகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் இயங்காத கல் குவாரிகளுக்கு பாறைகளை உடைக்க வெடி மருந்துகள் எப்படி கிடைக்கிறது என்பது குறித்தும், குவாரி உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உடனடியாக கல்குவாரிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் எனவும், குடியிருப்புகள் பகுதியில் சட்ட விதிமுறைகளை மீறி இயங்கும் இந்த கல்குவாரி, எம் சாண்ட் நிறுவனங்களை உடனடியாக மூட வேண்டும் என கூறினார்.


Next Story