பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் உண்ணாவிரதம்


பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் உண்ணாவிரதம்
x

பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

ஆக்கிரமிப்புகள்

பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையத்தில் காமராஜ் நகர் மற்றும் சரளைமேடு பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறமும் 50-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மாவட்ட நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள‌ வீடுகளை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் செய்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. பின்னர் அவர்களுக்கு திடுமல் கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள புறம்போக்கில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அப்பகுதியில் போக்குவரத்து, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும், ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள புறம்போக்கு பகுதியில் குடியிருப்புக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்து தரக்கோரியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதையடுத்து உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story