புழல் ஏரியில் மூழ்கி தந்தை-மகன் சாவு


புழல் ஏரியில் மூழ்கி தந்தை-மகன் சாவு
x

புழல் ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி தந்தை-மகன் பரிதாபமாக இறந்தனர்.

சென்னை

புழல்,

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோலையம்மன் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன்(வயது 40). இவர். அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இவருடைய மகன் விஷ்ணு(10). இவர், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

தந்தை-மகன் இருவரும் நேற்று முன்தினம் மாலை பம்மதுகுளம் அருகே புழல் ஏரியில் குளிக்க சென்றனர். ஏரியில் குளித்தபோது மணிவண்ணன்-விஷ்ணு இருவரும் திடீரென சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல்அறிந்து வந்த செங்குன்றம்தீயணைப்பு நிலைய வீரர்கள், ஏரியில் மூழ்கிய 2 பேரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு ஆகிவிட்டதால் உடல்களை தேடும் பணி நிறுத்தப்பட்டது.

நேற்று காலை புழல் ஏரியில் மீண்டும் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது நீரில் மூழ்கி பலியான மணிவண்ணன் மற்றும் அவருடைய மகன் விஷ்ணு ஆகியோரது உடல்களை அடுத்தடுத்து மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார், தந்தை-மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story