சாலை தடுப்பு சுவரில் கார் மோதி தந்தை, மகள் பலி


சாலை தடுப்பு சுவரில் கார் மோதி தந்தை, மகள் பலி
x

பரமத்திவேலூர் அருகே சாலையில் உள்ள தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் பலியாகினர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

தந்தை, மகள் பலி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள காரிப்பட்டி, குழந்தைசாமி நாடார் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் தமிழ்அழகன் (வயது 35). டிரைவர். இவரது மனைவி விசாலாட்சி (32). இவர்களுக்கு யோசிகா (6), தர்ஷா (3) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தமிழ்அழகன் மனைவி, மகள்கள் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 9 பேர் ஒரே காரில் காரிப்பட்டியில் இருந்து ராமேஸ்வரம் செல்ல சேலத்தில் இருந்து மதுரை செல்லும் பைபாஸ் சாலையில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர்.

பரமத்தி அருகே பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழ்அழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது குழந்தை தர்ஷா நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தது.

7 பேர் படுகாயம்

மேலும் விபத்தில் படுகாயமடைந்த 7 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அனைவரும் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் தந்தையும், மகளும் பலியான சம்பவம் பரமத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story