சாலையோர தடுப்பில் கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் பலி: தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்றபோது சோகம்....!


சாலையோர தடுப்பில் கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் பலி: தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்றபோது சோகம்....!
x

வாழப்பாடி அருகே சாலையோர இரும்பு தடுப்பில் கார் மோதி விபத்தில் தந்தை-மகள் பரிதாபமாக பலியாகினர். இரு சிறுமிகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

வாழப்பாடி,

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் பார்த்திபன்(வயது62). இவர், பெங்களூரில் டயர் ரீடிரேடிங் செய்யும் சிறுதொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.

நெய்வேலியில் வசித்து வந்த இவரது தாயார் இறந்து போனதாக தகவலறிந்த பார்த்திபன், இன்று காலை தனது மனைவி பத்மாவதி (58), மகள் மகாலட்சுமி(37), மருமகன் குங்குமராஜ்(42) பேத்தி அனல்யா(9), சமிட்ஷா(11) ஆகியோருடன் பெங்களூரில் இருந்து நெய்வேலி நோக்கி வாழப்பாடி வழியாக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுள்ளனர்.

காரை பார்த்திபனின் மருமகன் குங்குமராஜ் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த கார், வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி செல்லியம்மன் நகர் துணை மின் நிலையம் அருகே சென்றபோது, கட்டுப்பாடு இழந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்புவேலியில் மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பார்த்திபன் இவரது மகள் மகாலட்சுமியும், மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்த நிலையில் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிறுமி அனல்யா, சமிட்ஷா, பார்த்திபன் மனைவி பத்மாவதி, மருமகன் குங்குமராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற தாயின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற மகன் கார் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story