மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை


மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

காளையார்கோவிலில் இன்று மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு லைவர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்துகின்றனர்.

சிவகங்கை

குருபூஜை

மாமன்னர் மருது பாண்டியர்களின் நினைவுதினம் இன்று காளையார் கோவிலில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது அவர்களது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய தலைவர்கள் வருவார்கள். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் கூறியதாவது:- காளையார்கோவிலில் நடைபெறும் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. துரை மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டுகள் அரவிந்த், செல்வராஜ், அன்பு தலைமையில் 6 கூடுதல் சூப்பிரண்டுகள், 20 துணை சூப்பிரண்டுகள், 45 இன்ஸ்பெக்டர்கள், 200 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2057 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

இது தவிர மானாமதுரை சிப்காட், பூவந்தி சருகனி, நாட்டரசன் கோட்டை விலக்கு, முத்து காமாட்சி ஆர்ச், கீழசிவல்பட்டி, நேமத்தான்பட்டி, எஸ்.எஸ்.கோட்டை ஆகிய இடங்களில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்களை கண்காணிக்க அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

காளையார்கோவிலில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை தனியாக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கலவரங்கள் ஏற்பட்டால் அடக்குவதற்கு முன்னேற்பாடாக வஜ்ரா வாகனம் தயார் நிலையில் உள்ளது. 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் வருவார்கள்.

மருதுபாண்டியர்கள் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வருபவர்கள் போலீசார் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே வர வேண்டும்.

வழித்தடங்கள் விவரம்

காளையார் கோவிலில் மரியாதை செலுத்த செல்பவர்கள் செல்ல வேண்டிய வழித்தடங்கள் விவரம் வருமாறு:- திருச்சி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மற்றும் மத்திய மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் திருமயம், கீழச்சிவல்பட்டி, திருப்பத்தூர், சிவகங்கை வழியாக காளையார்கோவில் சென்று மீண்டும் அதே வழியில் திரும்பி செல்ல வேண்டும்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் திண்டுக்கல், மதுரை-மானாமதுரை பைபாஸ் சிவகங்கை வழியாக காளையார்கோவில் சென்று திரும்பி அதே வழியில் செல்லவேண்டும்.

மதுரை வரிச்சியூர், பூவந்தி வழியாக வருபவர்கள் சிவகங்கை வழியாக காளையார்கோவில் சென்று மீண்டும் அதே வழியில் செல்லவேண்டும். மேலூர் பகுதியில் இருந்து வருபவர்கள் சிவகங்கை வழியாக காளையார் கோவில் சென்று மீண்டும் அதே வழியில் செல்லவேண்டும்.

தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மதுரை, மானாமதுரை பைபாஸ் சிவகங்கை வழியாக காளையார் கோவில் சென்று மீண்டும் அதே பாதையில் செல்லவேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் பரமக்குடி, பார்த்திபனூர், மானாமதுரை, சிவகங்கை வழியாக காளையார்கோவில் சென்று விட்டு மீண்டும் அதே வழியில் திரும்ப வேண்டும்.

அனுமதி கிடையாது

எந்த காரணம் கொண்டும் பரமக்குடி, குமாரகுறிச்சி, இளையான்குடி வழியாகவோ, காரைக்குடி, மானகிரி, கல்லல் வழியாகவோ, திருப்பத்தூர் மதகுபட்டி, நாட்டரசன்கோட்டை வழியாகவோ காளையார்கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story