தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சமும், ஒரு சவரன் தங்க பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2022-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிப்பவர்கள் சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூக சீர்திருத்த கொள்கை, கலை, இலக்கியம், சமூக பணிகள் ஆகியவற்றில் உள்ள அர்ப்பணிப்பு ஆகிய தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரி மற்றும் மேற்குறிப்பிட்ட தகுதியுடையவராயின் அதற்குரிய ஆதாரங்களை மெய்ப்பிக்கும் வகையில் ஆவணங்கள், புகைப்படங்கள், நிகழ்வுகள் குறித்த நாள், இடம் ஆகிய விவரங்களை தவறாது குறிப்பிட்டு அடுத்த மாதம்(அக்டோபர்) 31-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டர், கடலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






