மாமல்லபுரம் அருகே அறுந்து தொங்கிய மின் கம்பி உரசியதில் தந்தை, மகன் சாவு


மாமல்லபுரம் அருகே அறுந்து தொங்கிய மின் கம்பி உரசியதில் தந்தை, மகன் சாவு
x

மோட்டார் சைக்கிளில் தண்ணீர் கேன் வாங்க சென்ற போது அறுந்து தொங்கிய நிலையில் இருந்த மின் கம்பி உரசியதில் தந்தை, மகன் பலியானார்கள்.

செங்கல்பட்டு

அறுந்து தொங்கிய மின்கம்பி

மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன் (வயது 42). இவர், திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருடைய மகன் ஹேமநாதன் (10). மாமல்லபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று கோதண்டன் தண்ணீர் கேன் வாங்குவதற்காக தனது வீட்டில் இருந்து மகன் ஹேமநாதனுடன் மெயின் ரோட்டில் உள்ள கடைக்கு வயல்வெளி சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது உயர்அழுத்த மின் கம்பி ஒன்று 4 அடி உயரத்தில் அறுந்து தொங்கிய நிலையில் கிடந்தது.

மின்சாரம் தாக்கி சாவு

அந்த வழியாக சாலையை கடக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த கோதண்டன், ஹேமநாதன் இருவர் மீதும் மின் கம்பி உரசியது. இதில் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மின் கம்பியில் சிக்கியிருந்த இருவரது உடலும் மீட்கப்பட்டது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story