24-வது மாடியிலிருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை; திருமணம் ஆகாத விரக்தியில் விபரீத முடிவு


24-வது மாடியிலிருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை; திருமணம் ஆகாத விரக்தியில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 2 July 2022 7:34 PM GMT (Updated: 3 July 2022 12:50 AM GMT)

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திருமணம் ஆகாத விரக்தியில் 24-வது மாடியில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

பெண் என்ஜினீயர்

சென்னையை அடுத்து கேளம்பாக்கம் அருகே உள்ள ஏகாட்டூர் பழைய மாமல்லபுரம் சாலையில் சொகுசு வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 30 மாடிகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். 24-வது மாடியில் வில்லியம் ஜேம்ஸ் என்பவர் தனது மகள் ஜெனிபருடன்(வயது 35) வசித்து வந்தார்.

சாப்ட்வேர் என்ஜினீயரான ஜெனிபர் பல்வேறு ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். கொரோனா காலத்தில் இவரது வேலை பறிபோனது. இதன் பின்னர் பல்வேறு ஐ.டி. நிறுவனங்களில் வேலை தேடியும் வேலை கிடைக்கவில்லை.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் ஜெனிபர் விரக்தியில் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் தனது அறையிலேயே முடங்கி கிடந்துள்ளார்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் 24-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். சத்தம் கேட்டு காவலாளி ஓடிச்சென்று பார்த்துள்ளார். அப்போது ஜெனிபர் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story