வேலைக்கு செல்லவேண்டாம் என்று கணவர் கண்டித்ததால் 3 வயது குழந்தையுடன் பெண் என்ஜினீயர் தற்கொலை


வேலைக்கு செல்லவேண்டாம் என்று கணவர் கண்டித்ததால் 3 வயது குழந்தையுடன் பெண் என்ஜினீயர் தற்கொலை
x

வேலைக்கு செல்லவேண்டாம் என்று கணவர் கண்டித்ததால் 3 வயது குழந்தையுடன் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட செட்டிகுளம் என்ஜி.ஓ. நகர் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 30). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஒட்டி வருகிறார். இவரது மனைவி சரண்யா (24). மகன் ஜிஷ்ணு (3).

சரண்யா என்ஜினீயரிங் படித்திருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நினைவுத்திறன் வளர்க்கும் பயிற்சி மையத்தில் வேலைக்கு சென்று வந்தார்.வேலைக்கு சென்றால் குழந்தையை கவனிக்க முடியாது என்பதால் மதன்குமார் தனது மனைவி சரண்யாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி கண்டித்து உள்ளார்.

இதனால் மனமுடைந்த சரண்யா தனது வீட்டில் யாரும் இல்லாத போது அறையில் தனது குழந்தை ஜிஷ்ணுவை தூக்கில் தொங்கவிட்டு தானும் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சரண்யா, குழந்தை ஜிஷ்ணுவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ளனர்.


Next Story