திருமணமான 8-வது நாளில் பெண் என்ஜினீயர் மர்ம சாவு


திருமணமான 8-வது நாளில் பெண் என்ஜினீயர் மர்ம சாவு
x
தினத்தந்தி 16 Sep 2022 6:45 PM GMT (Updated: 16 Sep 2022 6:45 PM GMT)

திருமணமான 8-வது நாளில் இறந்த பெண் என்ஜினீயரின் மர்ம சாவு குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்

விழுப்புரம்

செஞ்சி

பெண் என்ஜினீயர்

செஞ்சியை அடுத்த நாட்டார் மகங்கலத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன் மகன் விநாயகமூர்த்தி. என்ஜினீயரான இவருக்கும், செஞ்சி தாலுகா கீழ்நெல்லிமலை கிராமத்தை சேர்ந்த டிப்ளமோ என்ஜினீயரான ரஞ்சிதா(வயது 26) என்பவருக்கும் கடந்த 9-ந் தேதி செஞ்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து ரஞ்சிதாவின் தாய் வீட்டுக்கு விருந்துக்கு சென்றிருந்த புதுமண தம்பதியினர் கடந்த 14-ந் தேதி நாட்டார் மங்கலத்துக்கு திரும்பி வந்தனர்.

தற்கொலை

இந்நிலையில் நேற்று காலை விநாயமூர்த்தி ரஞ்சிதாவின் தாய் பூங்கொடிக்கு போன் செய்து ரஞ்சிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மாப்பிள்ளை வீட்டுக்கு உறவினர்களுடன் விரைந்து சென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். ரஞ்சிதாவின் சாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் ரஞ்சிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சப்-கலெக்டர் விசாரணை

மேலும் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக செஞ்சி போலீஸ் நிலையத்தில் பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி மேற்பார்வையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் திருமணமான ஒரு வாரத்தில் ரஞ்சிதா தற்கொலை செய்து கெண்டதால் அவரது சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து திண்டிவனம் சப்-கலெக்டர் அமித் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 8-வது நாளில் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story