'பேரிடரே இல்லை என்று மத்திய நிதி மந்திரி சொன்னார், தற்போது ஆய்வு செய்ய வந்துள்ளார்' - உதயநிதி ஸ்டாலின்


பேரிடரே இல்லை என்று மத்திய நிதி மந்திரி சொன்னார், தற்போது ஆய்வு செய்ய வந்துள்ளார் - உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 26 Dec 2023 12:07 PM GMT (Updated: 26 Dec 2023 12:20 PM GMT)

பேரிடர் நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளிடையே மோதல் போக்கு இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய நிர்மலா சீதாராமன், தூத்துக்குடி மாநகர பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் மத்திய மந்திரியின் வருகை குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பேரிடர் நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளிடையே மோதல் போக்கு எதுவும் இல்லை. முதலில் பேரிடரே இல்லை என்று மத்திய நிதி மந்திரி சொன்னார், தற்போது ஆய்வு செய்வதற்காக வந்துள்ளார். ஆய்வு செய்துவிட்டு அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்."

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story