கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நிதி உதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நிதி உதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டி தொகையை கொண்டு, மாதந்தோறும் ஏழை-எளிய, நலிந்தோருக்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

வைப்பு நிதியாக போடப்பட்ட ரூ.5 கோடியில், 30-வது புத்தக கண்காட்சியை 10-1-2007 அன்று திறந்து வைத்து கருணாநிதி பேசும்போது, கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவித்து, அந்த சங்கத்துக்கு வழங்கியது போக மீதம் உள்ள ரூ.4 கோடியில் இருந்து வரும் வட்டி தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படுகிறது.

2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 75 லட்சத்து 90 ஆயிரம். இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story