சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்


சொந்த வீடு இல்லாத  கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம்   தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
x

சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் ராமு தெரிவித்துள்ளார்.

கடலூர்

கடலூர்,

இதுதொடர்பாக உதவி ஆணையர் ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கட்டுமான தொழிலாளர்கள்

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் கீழ் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்கள், சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் தாங்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதிஉதவி வழங்கப்படுகிறது.

மேலும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில், வீடு ஒதுக்கீடு பெற நிதிஉதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கட்டுமான தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

அந்த வகையில் வீடு வழங்கும் திட்டத்தில் பயன்பெறுவதற்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் தொழிலாளியாக பதிவு பெற்று தொடர்ந்து 3 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் குடும்பத்தினருக்கு சொந்தமாக கான்கிரீட் வீடு இருத்தல் கூடாது. மேலும் மத்திய, மாநில அரசுகளின் வேறு எந்த வீட்டு வசதி திட்டங்களிலும் பயன் பெற்றிருத்தல் கூடாது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வீடு கட்ட ரூ.4 லட்சம்

குறைந்தபட்சம் 300 சதுரஅடி சொந்த இடம் இருக்க வேண்டும். பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ இணைந்து வீட்டு மனைப்பட்டா இருக்க வேண்டும்.

வீடு கட்டுவதற்கான தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும். முதல் தவணை ரூ.2.76 லட்சமும், இரண்டாம் தவணை ரூ.1.25 லட்சமும் என மொத்தம் ரூ.4 லட்சமாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

மேலும் வீட்டுமனை இல்லாத பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை தேர்ந்தெடுத்து குடியிருப்பு ஒதுக்கீடு பெறவும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம்

எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் https://tnuwwb.tn.gov.inஎன்ற இணையதள முகவரி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலர்களால் எக்காரணம் கொண்டும் மனுக்கள் நேரடியாக பெறப்பட மாட்டாது.

எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் சொந்தமாக வீடு இல்லையெனில், மேற்கண்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய முறையில் இணையதளத்தில் மனு செய்து, திட்டத்தின் முழு பயனை பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story