கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க நிதி உதவி;கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்


கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க நிதி உதவி;கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
x

கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு

கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

புனரமைத்தல் பணிகள்

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு கடந்த 2016-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதி உருவாக்குதல் போன்ற கூடுதல் பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப ரூ.1 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.

மின்னணு பரிவர்த்தனை

மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு, பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றின் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன், சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும்.

நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அனுகலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story