பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தீத்தடுப்பு, பேரிடர் மீட்பு ஒத்திகை


பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தீத்தடுப்பு, பேரிடர் மீட்பு ஒத்திகை
x
தினத்தந்தி 13 Oct 2023 9:45 PM GMT (Updated: 13 Oct 2023 9:46 PM GMT)

பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தீத்தடுப்பு, பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

திண்டுக்கல்

நத்தம் தீயணைப்பு நிலையம் சார்பில் நத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் தீத்தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் ராமையா தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். பின்னர் தீயணைப்பு படைவீரர்கள் தீத்தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும்போது, அதில் சிக்கிய நபர்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று செயல்விளக்கம் அளித்தனர். மேலும் கியாஸ் சிலிண்டரால் ஏற்படும் தீவிபத்தை எப்படி கட்டுப்படுத்துவது, கட்டிடங்களில் தீவிபத்து ஏற்பட்டால் அதிலிருந்து எப்படி மீட்பது என்பது குறித்தும் ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையம் சார்பில் குஜிலியம்பாறை கடைவீதி சாலையில் தீத்தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்கு தாசில்தார் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். அப்போது பேரிடர் காலத்தில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், தீத்தடுப்பு குறித்தும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

பழனி தீயணைப்பு நிலையம் சார்பில் பழனி அரசு மருத்துவமனையில் பணியாளர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நேற்று நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் கலந்துகொண்டு, தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது, பேரிடர் காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிகை நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். தொடர்ந்து தீத்தடுப்பு குறித்து ஒத்திகையிலும் ஈடுபட்டனர். இதில் டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


Next Story