தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையாளர்கள், வணிகர்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையாளர்கள், வணிகர்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக இணைய வழியில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு:-

கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்திற்கான ப்ளூ பிரிண்ட் வரைபடம் (6 நகல்). கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம், சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் அல்லது வாடகை கட்டிடமாக இருப்பின் வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிமத்தினை காட்டும் ஆவணம். உரிமத்திற்கான கட்டணம் ரூ.500 அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் செலான். இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை) வாரிசு ரசீது. புகைப்படம் 2 (பாஸ்போர்ட் சைஸ்) ஆகியவை ஆகும்.

மேற்கூறிய வழிமுறைகளை கடைப்பிடித்து தற்காலிக பட்டாசு உரிமம் வேண்டுவோர் இனிவரும் காலங்களில் தீபாவளி பண்டிகை மட்டுமின்றி புது வருட பிறப்பு, கிறிஸ்துமஸ் போன்ற இதர பண்டிகைகளிலும் தற்காலிக பட்டாசு உரிமம் பெற இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

தங்களின் ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை முடிவு பெற்றவுடன் ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்துடனும், தற்காலிக உரிமத்தின் ஆணையினை இ-சேவை மையம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு பெறப்படும் பட்டாசு உரிமம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்கள் வரை செல்லத்தக்கதாகும். மேலும் நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழிமுறை பொருந்தாது. உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story