பெயிண்டு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து 7 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்
![பெயிண்டு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து 7 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள் பெயிண்டு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து 7 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/02/1424191-theee.webp)
மணலி,
மணலி எலந்தனூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் பெயிண்டு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் சி.பி.சி.எல், செங்குன்றம், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், மணலி, அம்பத்தூர், எண்ணூர், அசோக் நகர் ஆகிய 10 தீயணைப்பு நிலையத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ கொளுந்து விட்டு எரிந்ததால் ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்து 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் இருந்து ஏற்பட்ட புகையினால் மணலி, எண்ணூர், திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் கரும்புகை சூழ்ந்தது.
இந்த சம்பவம் குறித்து மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். இந்த பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.