மீனவர் கத்தியால் குத்திக் கொலை


மீனவர் கத்தியால் குத்திக் கொலை
x

மணமேல்குடியில் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த மீனவரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

மீன்பிடி தொழில்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வடக்கு அம்மாப்பட்டினத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 46). இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகனான பிரேம்குமார் (24), சிவகங்கை மாவட்டம் கல்லலில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். மற்றொரு மகனான ஸ்ரீராம் (21) காரைக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். வேல்முருகன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பாக்கியலட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

கத்தியால் குத்திக்கொலை

இந்த நிலையில் நேற்று இரவும் குடிேபாதையில் பாக்கியலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் தந்தை வேல்முருகனை மகன் பிரேம்குமார் தட்டிக்கேட்டார். அப்போது தந்தைக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரேம்குமார் கத்தியால் வேல்முருகனின் மார்பு மற்றும் உடல் பகுதியில் குத்தினார். இதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மணமேல்குடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.


Next Story