மீன்பிடித் தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் - குறைவாக மீன்கள் கிடைத்ததால் ஏமாற்றம்


மீன்பிடித் தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் - குறைவாக மீன்கள் கிடைத்ததால் ஏமாற்றம்
x

தஞ்சை மாவட்டத்தில் 61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் போதுமான வருமானமின்றி ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல்தோட்டம், சின்னமனை, செம்பியன்மாதேவிபட்டிணம் உட்பட சுமார் 32 மீனவ கிராமங்களில் உள்ள 4, 500 நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 14-ந்தேதியுடன் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் 61 நாட்களுக்கு பிறகு நேற்று விசைப்படகில் மீனவர்கள் கடலுக்கு சென்றன. இவர்கள் இன்று அதிகாலை கரை திரும்பினர். ஆனால் மீன்கள் எதிர்பார்த்த அளவு கிடைக்க வில்லை என்று கவலையுடன் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில்,

மீன்பிடி தடைகாலத்தில் குறைந்தது ரூ. 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை படகுகளுக்கு மராமத்து செலவு செய்துதான் கடலுக்கு செல்வது வழக்கம். ஆனால் 61 நாட்கள் படகுகள் ஒரே இடத்தில் நிறுத்தி இருந்ததால் படகுகளின் மராமத்து செலவிற்கு அளவு கிடையாது.

அவ்வாறு செலவு செய்து நேற்று மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். முதல் நாள் என்பதால் குறைந்தது 300 லிட்டர் வரை டீசல் போடவேண்டி இருந்தது.

சராசரியாக ரூ. 40 ஆயிரம் வரை டீசல் செலவு, மேலும் மீனவர்களுக்கு தினக்கூலி, தளவாடச் சாமான்கள், ஐஸ், உப்பு என மொத்தம் 45 ஆயிரம் செலவு செய்து கடலுக்குச் சென்றனர். படகு ஒன்றிற்கு 200 கிலோ வரை இரால் வருமானத்தை எதிர்பார்த்து கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு 50 முதல் 100 கிலோ வரைதான் இரால் வருவாய் இருந்தது.

காரணம் என்னவென்று புரியவில்லை. இதனால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் கரை திரும்பி உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story