15 ஆண்டுகளுக்கு பிறகு பொம்மனப்பாடி ஏரியில் மீன் பிடி திருவிழா


பொம்மனப்பாடி ஏரியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்து சென்றனர்.

பெரம்பலூர்

மீன்பிடி திருவிழா

பெரம்பலூர் மாவட்டம், பொம்மனப்பாடி கிராமத்தில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி கடந்த 2 ஆண்டுகளாக நிரம்பி வருகிறது. விவசாயிகள் இந்த ஏரி தண்ணீர் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரியில் மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டு, தண்ணீ்ர் குறைந்தவுடன் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி மீன் பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

கடந்த 15 ஆண்டுகளாக ஏரியில் மீன் பிடி திருவிழா நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று பொம்மனப்பாடி ஏரியில் மீன்பிடி திருவிழா நடந்தது. மீன் பிடிக்க நேற்று அதிகாலை 3 மணியளவில் இருந்து பொதுமக்கள் பொம்மனப்பாடி ஏரிக்கு வரத் தொடங்கினர். ஆனால் காலை 9 மணியளவில் மீன்பிடி திருவிழா தொடங்கியது.

அதிக எடையுள்ள மீன்கள்

இதில் பொம்மனப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சில கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், மீன் பிடிப்பவர்கள் ஆர்வத்துடன் ஏரியில் இறங்கி வலை, கத்தா, கூடை, சேலை, கொசு வலைகளை பயன்படுத்தி போட்டி போட்டு மீன்களை பிடிக்க தொடங்கினர். பலருக்கு அதிக எடையுள்ள மீன்கள் கிடைத்தன. அதிலும் விரால் கெண்டை, கெழுத்தி, உளுவை உள்ளிட்ட மீன்களும் மற்றும் வளர்ப்பு மீன்களும் கிடைத்தன.

15 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடந்ததால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீன் பிடித்து வீட்டிற்கு சென்றதை காணமுடிந்தது. பொம்மனப்பாடி ஏரியில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story