விராலிமலை முருகன் கோவிலில் கொடியேற்றம்


விராலிமலை முருகன் கோவிலில் கொடியேற்றம்
x
தினத்தந்தி 4 Jun 2022 6:52 PM GMT (Updated: 4 Jun 2022 7:09 PM GMT)

விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. தேரோட்டம் 12-ந் தேதி நடக்கிறது.

புதுக்கோட்டை

விராலிமலை முருகன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் விராலிமலை முருகன் கோவில் சிறப்பு பெற்ற தலமாகும். இங்கு அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்து அஷ்டமா சித்தி வழங்கி திருப்புகழ் பாட செய்த தலமாக விளங்கி வருகிறது. இங்கு மலைமேல் முருகன் ஆறு முகங்களுடன் வள்ளி-தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கமாகும். இதில் வைகாசி திருவிழாவானது 11 நாட்கள் நடைபெறும்.

தேரோட்டம்

இந்தநிைலயில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று காலை சுப்பிரமணியசுவாமி, வள்ளி- தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி முன்பு உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியர்கள் முருகன் கொடி ஏற்றி வைத்து ரக்‌ஷாபந்தனம் என்ற காப்பு கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு வேளைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளிக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி திருவீதி உலா வருவார். இந்த நிகழ்ச்சி 11 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந் தேதி காலை 9.30 மணியளவில் நடக்கிறது. அதனை தொடர்ந்து 13-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 14-ந் தேதி விடையாற்றியுடன் வைகாசி திருவிழா நிறைவடைகிறது.

இதற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சிவாச்சாரியர்கள், மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


Next Story