தவிட்டுப்பாளையத்தில் 50 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது


தவிட்டுப்பாளையத்தில் 50 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது
x

தவிட்டுப்பாளையத்தில் 50 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் 126 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கரூர்

காவிரியில் வெள்ளம்

கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்து வெள்ள நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்து அடைந்து, தற்போது அணையின் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து சுமார் 2 லட்சத்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் வெள்ளநீர் கரூர் மாவட்டம், நொய்யல் வழியாக தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு கடல் போல் காட்சி அளிக்கிறது.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்

இந்நிலையில் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றங்கரையோரம் குடியிருக்கும் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புவீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். தெருக்களின் சிமெண்டு சாலைகளில் சுமார் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வெள்ள நீர் ஏறுமுகமாக உள்ளது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் பாதிப்படைந்தது குறித்த தகவல் அறிந்த புகளூர் தாசில்தார் முருகன், மண்டல துணை தாசில்தார் அன்பழகன் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களைச் சேர்ந்த 126 பேரை தவிட்டுப்பாளையத்தில் உள்ள ஈ.வே.ரா. பெரியார் மண்டபம் மற்றும் தவிட்டுப்பாளையம் கிராம சேவை மையம் ஆகிய இடங்களில் 2 முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டனர்.

மருத்துவ பரிசோதனை

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகில் கட்டி இருந்த ஆடு, மாடுகளை மேடான பகுதிகளுக்கு ஓட்டிச் சென்று பாதிக்கப்படாமல் கட்டி வைத்துள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 126 பேருக்கும் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் வருவாய்த்துறை மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்று பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்பு பணி

இந்நிலையில் நேற்று மாலை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பகுதிக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு பாதுகாப்பு பணியை பலப்படுத்துமாறு உத்தரவிட்டனர். அதேபோல் தீயணைப்பு வீரர்கள் கொண்டு வந்துள்ள அனைத்து மீட்பு கருவிகளையும் பார்வையிட்டனர். பின்னர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்வையிட்டு சென்றனர்.


Next Story