காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - பவானியில் 200 வீடுகளை சூழ்ந்த தண்ணீர்...!


காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - பவானியில் 200 வீடுகளை சூழ்ந்த தண்ணீர்...!
x

பவானி காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

பவானி,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணை நிறைந்து உபரி நீர் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் மேட்டூர் அணை ஏற்கெனவே அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் உபரிநீரானது அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள சிங்கம்பேட்டை, கேசரிமங்கலம், வரதநல்லூர், சன்னியாசிப்பட்டி, ஊராட்சி கோட்டை,காடப்பநல்லூர், பவானி ஆகிய கிராமங்களிலும் காவிரி கரையோரங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

இந்நிலையில் பவானி நகரத்தில் தினசரி மார்க்கெட் அருகில் உள்ள பசுவேஸ்வரர் வீதி மற்றும் பூக்கடை அருகே உள்ள பாலக்கரை மற்றும் பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவேரி நகர் காவேரி வீதி ஆகிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது பவானி நகரில் மட்டும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்களை தாலுகா நிர்வாகம் மூலம் அந்த பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story