கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி நடைபெறுகிறது - கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர்


கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி நடைபெறுகிறது - கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர்
x
தினத்தந்தி 17 July 2022 7:49 AM GMT (Updated: 17 July 2022 8:10 AM GMT)

கள்ளக்குறிச்சி அருகே கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றது என மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி,

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி(வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி இருந்து 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர். தொடர்ந்து செருப்பு, கண்ணாடி பாட்டில் உள்ளிட்ட பொருட்களை கொண்டு போலீசார் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர்.

தொடர்ந்து போலீசாரின் வானத்திற்கு தீ வைக்கப்பட்டது. போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வருகின்றது. தொடர்ந்து பள்ளியின் முகப்பின் மீது ஏறி நுழைவு வாயிலை உடைத்து உள்ளேன் போராட்டக்காரர்கள் நுழைந்தனர்.

பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தற்போது பள்ளி வளாகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த பேருந்துகளுக்கு தீ வைத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

தொடர்ந்து பதற்றம் நிலவிவரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது,

கள்ளக்குறிச்சி அருகே கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. தவறு நிகழ்ந்திருந்தால் பள்ளி நிர்வாகம் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.



Next Story