அரசு விடுதியில் உணவு வழங்கப்படவில்லை
வால்பாறையில் அரசு விடுதியில் உணவு வழங்கப்படவில்லை என்று கல்லூரி மாணவிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் அரசு விடுதியில் உணவு வழங்கப்படவில்லை என்று கல்லூரி மாணவிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.
அரசு விடுதி
வால்பாறை அண்ணா நகரில் ஆதிதிராவிடர் நலத்துறையின் பள்ளி மாணவிகள் விடுதி உள்ளது. இங்கு 65 பேர் தங்க வசதி இருக்கிறது. தற்போது 20 பள்ளி மாணவிகள் தங்கியுள்ளனர்.
இதற்கிடையில் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்லூரி மாணவிகளுக்கான விடுதியில் இடப்பற்றாக்குறை நிலவியது. இதனால் வால்பாறை அரசு கல்லூரியில் பயிலும் வெளியிடங்களை சேர்ந்த 30 மாணவிகள், அண்ணா நகரில் உள்ள பள்ளி மாணவிகளுக்கான விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஓட்டலில் சாப்பிடுகிறோம்
ஆனால் அங்கு தங்கியுள்ள பள்ளி மாணவிகளுக்கு மட்டும் விடுதியில் உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவிகளுக்கு உணவு சமைத்து வழங்கப்படவில்லை.
இதுகுறித்து கல்லூரி மாணவிகள் கூறும்போது, விடுதியில் உணவு வழங்கப்படாதது குறித்து அங்குள்ளவர்களிடம் கேட்டால் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே உணவு வழங்க உத்தரவு உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் ஓட்டல்களில் சாப்பிட்டு வருகிறோம். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வகதிளை மேம்படுத்த வேண்டும் என்றனர்.