குமாரபாளையம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி பாதிக்கப்பட்ட நபர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு


குமாரபாளையம் அருகே  ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி  பாதிக்கப்பட்ட நபர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 14 Dec 2022 6:45 PM GMT (Updated: 14 Dec 2022 6:46 PM GMT)
நாமக்கல்

குமாரபாளையம் அருகே ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.1½ கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

ஏலச்சீட்டு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வேமன்காட்டுவலசு பகுதியில் தனிநபர் ஒருவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சீட்டு சேர்ந்து, மாதந்தோறும் உரிய தொகையை செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சீட்டு பணம் செலுத்தியவர்களிடம் முதிர்வு தொகையை வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே பணம் செலுத்திய பொதுமக்கள் பணத்தை திருப்பி தரக்கோரி அவரிடம் கேட்டபோது, பணத்தை திருப்பி தர முடியாது எனவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து முதிர்வு தொகையை பெற்று தர வலியுறுத்தி போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

ரூ.1½ கோடி மோசடி

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் அவரிடம் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தோம். ஆனால் அவர் சுமார் ரூ.1½ கோடிவரை முதலீடு பெற்று முதிர்வு தொகையை திருப்பி வழங்காமல், மோசடி செய்யும் நோக்கத்தில் காலம் தாழ்த்தி வருகிறார். அதனை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, நாங்கள் செலுத்திய பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story