அமைச்சர் பொன்முடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்


அமைச்சர் பொன்முடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்
x

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த முறை விசாரணையின்போது அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 3 பேர் ஆஜராகவில்லை. அதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் தொடா்ந்து பிறழ் சாட்சியமாக மாறி வருவதால், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில், தன்னையும் இணைத்துக்கொள்ள கோரி, அதிமுக முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 8-ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.

மனுவை ஏற்றுக் கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் 25-ஆம் தேதி (அதாவது இன்று) விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று காலை 10.15 மணியளவில் நேரில் ஆஜரானார். அவருடன் அதிமுக வழக்கறிஞர்களும் உடனிருந்தனர்.


Next Story