மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்


மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்
x

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு, முதியோர் விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமரும் இடத்திற்கு சென்ற கலெக்டர் ஜெயசீலன் அவர்களிடமிருந்து மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்டார்.மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 6 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்கள், 2 பயனாளிகளுக்கு காதொலிக்கருவிகள் என மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.54 ஆயிரத்து 200 மதிப்பிலான உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் அனிதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.விருதுநகர் யூனியன் கன்னிசேரி புதூர் தியாகராஜபுரம் கிழக்கு காலனி தெருவில் உள்ள மக்கள் அடிப்படை வசதி கேட்டு மனு கொடுத்தனர்.கூரைகூண்டு கிராமத்தில் கிழக்கு தெருவில் வசிக்கும் ஆதித்தமிழர் பேரவை ஒன்றிய தலைவர் தங்கவேல் அருந்ததியர்களுக்கான மயான வசதி மற்றும் மயானத்தில் நிழற்குடை அமைக்க கோரி மனு கொடுத்தார்.


Next Story