பெயிண்டரை அரிவாளால் தாக்கிய நண்பர்கள்


பெயிண்டரை அரிவாளால் தாக்கிய நண்பர்கள்
x

மது வாங்க கொடுத்த பணத்தில் மீதி தொகையை திரும்ப கேட்டதால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் பெயிண்டரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் ஒருவரை போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவான மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்

மது போதை

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் மோகன்(வயது 32). பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவரும், கரூர் வெண்ணைமலையைச் சேர்ந்த இளங்கோவன்(35) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தர்மன் ஆகிய 3 பேரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், மோகன் மற்றும் இளங்கோவன், தர்மன் ஆகியோர் மது அருந்துவதற்காக தர்மன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு சென்ற நிலையில் மோகன் மது வாங்கி வருவதற்கும், தின்பண்டங்கள் வாங்குவதற்கும் பணம் கொடுத்துள்ளார். இதனையடுத்து மூவரும் ஒன்றாக மது அருந்திய நிலையில் மோகன் மது வாங்கிய தொகை போக மீதம் உள்ள தொகையை அவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதல்

இதனால் ஆத்திரம் அடைந்த இளங்கோவன் மற்றும் தர்மன் ஆகிய இருவரும் சேர்ந்து மோகனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அரிவாளை எடுத்து தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் மோகனுக்கு தோள்பட்டை மற்றும் கை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலி தாங்க முடியாமல் துடித்த மோகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய இளங்கோவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தர்மனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story