போதிய விலை கிடைக்காததால் விரக்தி: செண்டுமல்லி பூச்செடிகளை டிராக்டரால் அழித்த விவசாயிகள்


போதிய விலை கிடைக்காததால் விரக்தி: செண்டுமல்லி பூச்செடிகளை டிராக்டரால் அழித்த விவசாயிகள்
x

போதிய விலை கிடைக்காத விரக்தியில் செண்டுமல்லி பூச்செடிகளை விவசாயிகள் டிராக்டர் மூலம் அழித்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை நாகாவதி அணை பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சாமந்தி, செண்டுமல்லி பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். இந்த பூக்கள் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் பூக்களை அறுவடை செய்து தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

தற்போது விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட்டுகளுக்கு செண்டுமல்லி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.

டிராக்டர் மூலம் அழிப்பு

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

போதிய விலை கிடைக்காத விரக்தியில் செண்டு மல்லி பூக்களை பெரும்பாலான விவசாயிகள் பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு உள்ளனர். ஒரு சில விவசாயிகள் மாற்று பயிர் செய்ய செண்டுமல்லி பூச்செடிகளை டிராக்டர் மூலம் அழித்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட பூ விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story