திருமணம் ஆகாததால் விரக்தி: கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணம் ஆகாததால் விரக்தி: கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 March 2024 9:23 PM GMT (Updated: 9 March 2024 5:46 AM GMT)

திருமணம் ஆகாததால் சதாசிவம் மிகுந்த கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள வண்டாவிளை பகுதியை சேர்ந்தவர் ரெத்தினசாமி. இவருடைய மனைவி ஜானகி. இவர்களுக்கு 2 மகள்களும், சதாசிவம் (வயது 33)என்ற மகனும் இருந்தனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. ரெத்தினசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பிறகு ஜானகியுடன் சதாசிவம் வசித்து கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார்.

அவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மிகுந்த கவலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சதாசிவம் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலையில் அந்த வழியாக சென்ற ஊர் மக்கள் பார்த்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகாததால் கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story