ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 27 Oct 2023 6:30 PM GMT (Updated: 27 Oct 2023 6:30 PM GMT)

நெய்வேலி ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கடலூர்

நெய்வேலி இந்திராநகரை சேர்ந்தவர் சேகர் மகன் கொளஞ்சி (வயது 37). பழ வியாபாரி. இவர் சம்பவத்தன்று தனது பழக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த வடக்கிருப்பு மாற்று குடியிருப்பை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ரஞ்சித் (23) என்பவர் கொளஞ்சியிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால், அவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இது பற்றி கொளஞ்சி நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. ரவுடியான இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில் ரஞ்சித்தை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.


Next Story