சிதம்பரம் அருகே வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பம்


சிதம்பரம் அருகே வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பம்
x

வீட்டில் இருந்த 5 சவரன் நகைகள், 20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன.

கடலூர்,

சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சி, பாலுதாங்கரை பகுதியில் வசிக்கும் தமிழ் இலக்கியா என்பவர், வழக்கம்போல் காலையில் உணவு தயாரிக்க, வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது ரெகுலேட்டரில் தீப்பற்றியுள்ளது. சாக்கை எடுத்து தீயை அணைக்க முயன்றபோது தீ அதிகம் பரவியுள்ளது.

இதையடுத்து தமிழ் இலக்கியா, அவரது மகன், மாமனார், மாமியார் ஆகியோர் வீட்டைவிட்டு அவசரமாக வெளியேறினர். சிறிது நேரத்தில் கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. தீ வேகமாகப் பரவியதால் வீடு தீக்கிரையானதுடன், 5 சவரன் நகைகள், 20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன.

சரியான நேரத்தில் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறியதால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story