கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பை


கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பை
x
தினத்தந்தி 4 Jun 2023 6:45 PM GMT (Updated: 5 Jun 2023 1:19 AM GMT)

தர்மபுரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பரிசு, கோப்பைகளை வழங்கினார்.

தர்மபுரி

கிரிக்கெட் போட்டி

தர்மபுரி அதியமான் கிரிக்கெட் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான டாக்டர் ஏ.எம்.ஆர். கிரிக்கெட் போட்டி மாவட்டத்தின் ஒன்றிய அளவில் 15 மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான தகுதிப்போட்டிகள் 4 மையங்களில் நடந்தன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

அதன்படி வகுரப்பம்பட்டி- சீலநாயக்கனூர் இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியை முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., அவரது மகள் சஞ்சுத்ரா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வகுரப்பம்பட்டி அணி முதலிடம்

இதையடுத்து நடந்த போட்டியில் வகுரப்பம்பட்டி அணி வெற்றி பெற்று முதலிடமும், சீலநாயக்கனூர் அணி 2-வது இடமும், கடகத்தூர், மாரண்டஅள்ளி ஆகிய அணிகள் 3-வது இடமும் பிடித்தன. இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு அதியமான் கிரிக்கெட் கிளப் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில் வரவேற்றுபேசினார்.

பரிசு

விழாவில் டாக்டர்அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு மாவட்ட மற்றும் மைய அளவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பேசினார். அதன்படி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அணிக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், 2-வது பரிசாக ரூ.1 லட்சம், 3-வது பரிசாக 2 அணிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டன. மேலும் மைய அளவில் முதலிடம் பிடித்த அணிக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதில் பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில நிர்வாகிகள் பாடி செல்வம், சாந்தமூர்த்தி, முருகசாமி, சண்முகம், மாது, வாசு நாயுடு, செந்தில், மாவட்ட நிர்வாகிகள் செல்வகுமார், பாலாஜி, பாலகிருஷ்ணன், சிவகுமார், காமராஜ், நகர நிர்வாகிகள் வெங்கடேசன், சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சவுந்தர பாண்டியன் நன்றி கூறினார்.


Next Story