இஞ்சி கிலோ ரூ.230-க்கு விற்பனை


இஞ்சி கிலோ ரூ.230-க்கு விற்பனை
x
தினத்தந்தி 25 Jun 2023 6:45 PM GMT (Updated: 26 Jun 2023 12:28 PM GMT)

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று இஞ்சி கிலோ ரூ.230-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல்

உழவர்சந்தை

நாமக்கல் - கோட்டை சாலையில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் இங்கு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

அந்த வகையில் நேற்று 19½ டன் காய்கறிகள் மற்றும் 4 டன் பழங்கள் என மொத்தம் 23½ டன் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.7 லட்சத்து 79 ஆயிரத்து 500 -க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 4,710 பேர் வாங்கி சென்றனர்.

விலை விவரம்

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.45-க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.60-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.36-க்கும், புடலங்காய் கிலோ ரூ.40-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.70-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.50-க்கும், கேரட் கிலோ ரூ.75-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.110-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.20-க்கும், இஞ்சி கிலோ ரூ.230-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்னவெங்காயம் கிலோ ரூ.50-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

கடந்த வாரத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் வரத்து குறைந்தும், அவற்றின் விலை சற்றே உயர்ந்தும் காணப்பட்டது. குறிப்பாக கடந்த வாரம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று கிலோவுக்கு ரூ.5 உயர்ந்து கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட இஞ்சி நேற்று கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து, கிலோ ரூ.230-க்கு விற்பனை செய்யப்பட்டது.


Next Story