மலை உச்சியில் இருந்து தள்ளி இளம்பெண் கொலை


மலை உச்சியில் இருந்து தள்ளி இளம்பெண் கொலை
x

மலை உச்சியில் கீழே தள்ளிவிட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்டார்.

வேலூர்,

வேலூரை அடுத்த பாலமதி மலைஉச்சியில் குழந்தை வேலாயுதபாணி கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து 100 அடிக்கு கீழே பாறை இடுக்கு பள்ளத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பிணமாக கிடந்தார். அவரது தலை மற்றும் உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. நேற்று காலை அந்த பகுதியில் மாடு மேய்க்க சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பிணமாக கிடந்த பெண் பிரவுன் நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தார். அவரது முகம் சிதைந்து காணப்பட்டதோடு விகாரமாக வீக்கத்துடன் இருந்தது. அவர் விழுந்த இடத்தின் அருகே உள்ள பாறைகளில் ஆங்காங்கே ரத்தக்கறை காணப்பட்டது. இறந்த பெண் குறித்து போலீசார் பாலமதி மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விசாரித்தனர். ஆனால் எந்த விவரமும் கிடைக்கவில்லை.

சிதம்பரத்தை சேர்ந்தவரா?

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன பெண்களின் விவரங்கள், புகைப்படங்களை போலீஸ் நிலையங்களில் சேகரித்தோம்.

அதில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமும், இறந்து போன பெண்ணின் புகைப்படமும் ஒரே மாதிரியாக உள்ளது. இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து பெண்ணின் பெற்றோர் உடலை பார்வையிட்டு அந்த இளம்பெண் அவரது மகளா? இல்லையா? என்பதை உறுதி செய்ய உள்ளனர்.

பாலமதி மலை உச்சியில் இருந்து இளம்பெண்ணை கீழே தள்ளிவிட்டு மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம். அல்லது இளம்பெண்ணுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மர்மநபர்கள் கொலை செய்து விட்டு பின்னர் மலை உச்சியில் இருந்து உடலை கீழே தூக்கி வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகிறோம் என்றனர்.


Next Story