பொள்ளாச்சியில் ஆட்டு சந்தை


பொள்ளாச்சியில் ஆட்டு சந்தை
x
தினத்தந்தி 26 Oct 2023 9:00 PM GMT (Updated: 26 Oct 2023 9:00 PM GMT)

பொள்ளாச்சியில் ஆட்டு சந்தை நடைபெற்றது. இங்கு வரத்து குறைந்தும், விலை உயரவில்லை.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் ஆட்டு சந்தை நடைபெற்றது. இங்கு வரத்து குறைந்தும், விலை உயரவில்லை.

ஆட்டு சந்தை

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வியாழக்கிழமைதோறும் நடைபெறும் வாரச்சந்தையின்போது, ஆடுகள் விற்பனை நடக்கிறது. இங்கு ஆடுகளை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் அதிகம் வருகின்றனர்.

கடந்த மாதம் 18-ந் தேதி முதல் புரட்டாசி மாதம் தொடங்கியதில் இருந்து சந்தையில் ஆடு விற்பனை மந்தமானது. இந்த நிலை ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்தது. இதையடுத்து இந்த வாரத்தில் நேற்று நடந்த சந்தை நாளின்போது, ஆடுகள் விற்பனை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்தனர்.

ஆனால் கேரள வியாபாரிகள் மற்றும் பிற இடங்களில் இருந்து வியாபாரிகள் வருகை குறைவால், கடந்த வாரம் போல் நேற்றும் குறைவான விலைக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

குறைந்த விலை

நேற்று நடந்த சந்தையில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட வெள்ளாடு, செம்மறியாடு வழக்கமான 500-ல் இருந்து 200-க்கும் குறைவாக வரத்து இருந்தது. மேலும் சுற்றுவட்டார பகுதியில் இருந்த வியாபாரிகள் வருகையும் குறைவாக இருந்தது. இதன் காரணமாக சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகளை, கடந்த புரட்டாசி மாதம் போல், இப்போதும் குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர்.

சுமார் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும், 15 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரையிலும் மட்டுமே விற்பனையானது.

அடுத்த மாதம்(நவம்பர்) தீபாவளி பண்டிகை வருவதையொட்டி அடுத்த வாரம் ஆடு விற்பனை, விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story