சமயபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை


சமயபுரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 24 Jun 2023 6:35 PM GMT (Updated: 25 Jun 2023 11:45 AM GMT)

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது

திருச்சி

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

ஆட்டுச்சந்தை

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ச.கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒத்தக்கடையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். இங்கு சராசரியாக ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை ஆடுகள் விற்பனை ஆகும்.

ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை ஆடுகள், அதன் எடை, தரத்திற்கேற்ப விற்பனையாகும். இந்த ஆட்டுச்சந்தைக்கு திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், கெங்கவல்லி, ஆத்தூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் லாரி, வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் செம்மறியாடு, வெள்ளாடு உள்ளிட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

அதிக அளவில் கொண்டுவரப்பட்ட ஆடுகள்

அதேபோல ஆடுகளை வாங்குவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் ஏராளமானோர் சமயபுரம் ஆட்டுச்சந்தைக்கு வருகை தருவார்கள். இந்த நிலையில் வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதைமுன்னிட்டு சமயபுரம் ஆட்டுச்சந்தைக்கு நேற்று வழக்கத்தை விட ஆடுகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

அதிகாலை 4.30 மணியில் இருந்து பல்வேறு வாகனங்களில் ஆடுகளை கொண்டு வந்து இறக்கினார்கள். ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் ஆடுகளை அதன் எடைக்கு ஏற்ப பேரம் பேசி வாங்கி சென்றனர்.ஒரு ஆடு சுமார் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரம் வரை விலை போனது.

ரூ.1 கோடிக்கு விற்பனை

ஆடுகளை போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சமயபுரம் ஆட்டுச்சந்தைக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையாகின என்றார்.


Next Story