நிலக்கோட்டை அருகே கத்தியால் குத்தி பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


நிலக்கோட்டை அருகே கத்தியால் குத்தி பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2023 9:15 PM GMT (Updated: 22 Oct 2023 9:15 PM GMT)

நிலக்கோட்டை அருகே கத்தியால் குத்தி பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே உள்ள ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் ரவி. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி ராணி (வயது 46). நேற்று முன்தினம் இரவு இவர், தனது வீட்டில் தனியாக அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ரவியின் நண்பர்கள் எனக்கூறி 4 பேர் வீட்டுக்குள் புகுந்தனர்.

பின்னர் அவர்கள், திடீரென கத்தியை காட்டி மிரட்டி ராணியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், ராணியை சரமாரியாக கத்தியால் குத்தி அவர் அணிந்திருந்த 9½ பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

இதனையடுத்து வலி தாங்க முடியாமல் ராணி அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதற்கிடையே கத்தியால் குத்தியதில் காயம் அடைந்த ராணி, நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ராணி கொடுத்த புகாரின் பேரில், விளாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story