தேர்தல் பறக்கும் படை சோதனை: ரூ.6.2 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்


தேர்தல் பறக்கும் படை சோதனை: ரூ.6.2 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 March 2024 6:27 AM GMT (Updated: 23 March 2024 7:01 AM GMT)

ராசிபுரம் அருகே ரூ.6.2 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராசிபுரம்,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன்4ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் பறக்கும் படை அதிகாரிகளும் பல்வேறு இடங்களுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் ஒரு தனியார் நிதி நிறுவனம் 29 கிலோ எடையுள்ள ரூ.6.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்றது கண்டறியப்பட்டது.

அந்த தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த தங்க நகைகளை எடுத்து வந்தவர்களை பறக்கும் படை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story