திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது - முதன்மை கல்வி அலுவலர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது - முதன்மை கல்வி அலுவலர் தகவல்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் ராமன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, அன்றைய நாளில் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றுவோர் தேர்வு செய்யப்பட்டு, நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர்கள் 3, உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் 1, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் 3, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் 2, மெட்ரிக் பள்ளி முதல்வர், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, இடைநிலை ஆசிரியர் தலா ஒருவருக்கு என மொத்தம் 13 பேருக்கு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்ளாக திருவள்ளூர் மாவட்டத்தில் போரூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கருணாகரன், அம்பத்தூர் பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வனிதா ராணி, திருவள்ளூர் டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன், அருங்குளம் அரசு மேல்நிலை பள்ளி முதுகலை ஆசிரியர் ராதய்யா, தண்டுரை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் நிலை 1 , கிரேஸ் செல்வராணி, கிளாம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தணிகாசலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஓ.வி.நாராயணன், திருவள்ளூர் ஒன்றியம் செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கவரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திரிபுரசுந்தரி, அதே ஒன்றியம் பாதிரிவேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஈஸ்வரய்யா, ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மனேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லதா, பள்ளிப்பட்டு ஒன்றியம் அத்திமாஞ்சேரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் மே.மு.மாதவன் மற்றும் அம்பத்தூர் எபினேசர் மார்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கெர்னாப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டோருக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை, 36.5 கிராம் எடை கொண்ட வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் போன்றவையும் வழங்கப்படும். விருது பெறும் நிகழ்ச்சிக்கு செல்வோருக்கு ஆணையரால் வழங்கிய அழைப்பு் கடிதம், அடையாள அட்டை போன்றவற்றை தவறாமல் கொண்டு செல்ல வேண்டும்.


Next Story